top of page

30 டிசம்பர் 2021 சென்னை

  • Sivaraj Parameswaran
  • Dec 31, 2021
  • 3 min read

Updated: Apr 8, 2024



காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவும் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை, தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே....

என்ற பாடல் அமேசான் மியூசிக்-கில் ஒலிக்க கையில் டீ கோப்பையுடன், "என்ன கதை எழுதலாம்?" என்று யோசித்துக்கொண்டே இரண்டாவது மாடியிலிருந்து பேயாய் பெய்த மழையை பார்த்துக்கொண்டிருந்தேன். மதியம் 1.30 மணிக்கே மாலை 6.30 மணிபோல் இருட்டியது. இடியுடன் மின்னலும் அடித்து கண்ணை சிமிட்ட செய்தது. சாரலை மேலும் ரசிக்க குடையை தேடினேன், அவசரத்திற்கு குடை கண்ணில் எங்கும் படவில்லை. சரியென headset-ஐ மாட்டிக்கொண்டு பாட்டை மாற்றினேன். இப்பொழுது,



என்றென்றும் 
என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பார்வையிலே....

என்ற பாட்டு சத்தமாக எனது காதில் ஒலிக்க, தலையில் ஒரு பிளாஸ்டிக் கவரை மாட்டிக்கொண்டு மழையில் நனைந்தேன். மழையின் சத்தம் காதை அடைத்தது, கூடவே பாட்டு சத்தமும் கேட்க காது நன்றாக அடைத்தது. பக்கத்து மாடி வீட்டிலிருந்து ஒருவர் ஏதோ என்னை பார்த்து கையால் சைகை செய்ய என்ன என்று புரியாமல் அவரை பார்த்து என்ன என்று கை அசைத்தேன். மறுநொடி மின்னல் நேரடியாய் என்னை தாக்கியது. காதில் இருந்த headset தெறித்தது, பிளாஸ்டிக் கவர் கருகியது. நான் மட்டும் 1000 வாட்ஸ் பல்பு போல் பிரகாசமாக ஜொலிஜொலித்தேன். 100 மீட்டர் தூரத்திற்கு எனது வெளிச்சம் பரவியது. எல்லோரும் என்னை பார்த்துக்கொண்டிருக்க நான் மட்டும் 10 அடி தூரம் தரையிலிருந்து மேலே மிதந்து கொண்டிருந்தேன். 20 வினாடிகள் கழித்து நான் சுருண்டு கீழே விழுந்தேன். மொத்த இடமும் இருட்டியது.


கண் விழித்து பார்த்தபொழுது, நான் எனது 10 வது வகுப்பறையில் தரையில் படுத்து கிடந்தேன். மீரா தண்ணீர் தெளித்து என்னை எழுப்பினாள். நான் அவளை கண்டு வியப்படைந்தேன். 24 வருடங்கள் முன்னர் பார்த்த அதே மீரா. சுற்றும் பார்க்க அதே பழைய நண்பர்கள் அதே பழைய வகுப்பு. கரும்பலகையில் 30 டிசம்பர் 1998 என்று எழுதப்பட்டிருந்தது. கண்ணை இருமுறை துடைத்து பார்த்தேன் கரும்பலகை மாறவில்லை. வகுப்பில் என் செயலை கண்டு எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்க்க, எனக்கு விவரம் புரிய ஆரம்பித்தது! worm hole-யில் மாட்டிக்கொண்டோம் என்று புரிந்தது. நேரே மீராவிடம் சென்று நடந்ததை சொன்னேன். அவள் வாய்விட்டு சிரித்தாள். அவள் என்னை நம்பவில்லை என்று நன்றாகவே தெரிந்தது. அவளுக்கு எப்படி புரியவைப்பது என்று யோசித்தேன், நான்கு வருடங்கள் கடந்து கல்லூரி படிக்கும் பொழுது அவளுடன் உறவாடியபொழுது அவள் மச்சங்கள் எங்கெங்குள்ளது என்பது இன்றளவும் என் மனதில் தெள்ளத்தெளிவாக ஞாபகம் இருந்தது. இதை அவளிடம் சொன்ன பொழுது பளார் என்ற சத்தம் கேட்டது கோபமாக மீரா அழுது கொண்டே பாத்ரூமை நோக்கி ஓடியது தெரிந்தது. எல்லோர் கண்களும் மறுபடியும் என் மீது பாய்ந்தது.

என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்க, மேகம் இருண்டது மதியம் 1.30 மணிக்கு மாலை 6.30 மணி போல் இருண்டது. மின்னல் தான் worm hole என்பது புரிந்தது. என்னுள் ஒரு மௌன சிரிப்பு சிரித்தது. நேரே பள்ளி மொட்டை மாடிக்கு சென்றேன். அங்கிருந்த ஒரு அலுமினிய கம்பியை எடுத்து அதில் கேபிள் வயரை கட்டி அந்த வயரை என் கையில் கட்டினேன். என் மீது மின்னல் அடிக்க உயரம் போதவில்லை என்பதை உணர்ந்தேன். வாட்டர் டேங்க் மீது ஏறி கம்பியை தூக்கி பிடித்தேன்! இதை கீழிருந்து கண்ட பள்ளி மாணவர்கள் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்றெண்ணி கூச்சல் இட ஆரம்பித்தனர். மழையில் நான் எகிறி குதிக்க மின்னல் என் அருகில் வந்து சென்றது. நான் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்றெண்ணி கூச்சல் அதிகமானது. நான் மனம் தளராமல் இம்முறை குதிக்க மின்னல் என்னை நோக்கி வர மீரா ஓடி வந்து என்னை வாரியணைத்து தரையில் தள்ளி விட்டாள்.


ஏன் என்று கேட்பதற்குள் அவள் என்னை வாரி அணைத்து முத்த மழை பொழிந்து I Love You என்று சொல்ல, அதற்குள் ஆசிரியர்கள் படை எங்களை சூழ்ந்துகொண்டது. சுசீலா மேடம் என்னை அரவணைத்துக்கொண்டு கீழே அழைத்து செல்ல முதல் முத்தம் ஞாபகத்திற்கு வந்தது. மீராவின் கண்கள் என்னை கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது. மழையும் இடியும் மின்னலும் நின்றது. என் விதியும் முடிந்தது என்பது தெளிவாக தெரிந்தது. லைப்ரரியில் வைத்து இலவச அறிவுரைகள் வாரி தந்து கொண்டிருந்தனர். மீரா ஓரமாக நின்று இதை கவனித்துக்கொண்டிருந்தாள், இனி நான் நடந்ததை சொல்லி புரியவைப்பதில் எந்த பயனும் இல்லை என்பதை நன்றாக உணர்ந்தேன். மீராவை கண்டு சிரித்தேன் அவளும் சிரித்தாள்.

காலத்தின் பயணத்தால் காதலும் காமமும் எப்படி செயல்படும் என்று தெரிந்து செயல் பட்டேன். மீராவை பயன் கொண்டேன். காலப்போக்கில் மீரா அலுத்து போனால் அவளை பிரிந்தேன், அதன் பின்னர் பல பெண்களை காதலித்தேன் மன்னிக்கவும் அது வெறும் காமாகவே இருந்தது. காலம் வேகமாக நகர்ந்தது. எதில் சொத்து சேர்க்க வேண்டும் என்பதை தெரிந்து சொத்துக்கள் சேர்த்தேன், பெரும் பணமும் பொருளும் சேர்த்தும் ஒரு முழுமையை உணரமுடியாமல் இருந்தேன். மீராவை மறுபடியும் காண முடிவு செய்தேன். மீராவை தேடி சென்றேன். காரில் செல்லும் பொழுது மழை மெதுவாக தூறல் அடிக்க தொடங்கியது. டிரைவரிடம் ஸ்டீரியோவில் பாட்டு போட சொன்னேன்.


காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவும் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை, தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே....

என்ற பாட்டு ஒலித்தது. நான் எதையோ நினைத்து சிரித்துக்கொண்டேன். அவள் பிளாட்டிற்கு செல்ல வாட்சமானிடம் பிளாட் நம்பர் விசாரித்து உள்ளே செல்ல மேகம் கருத்து, இடி சத்தமாய் ஒலித்தது, மின்னல் வேர் போல் வானில் பரவியது. 2A பிளாட் பெல்லை அடிக்க ஒரு ஆண் கதவை திறந்தார் மீரா என்று நான் கூற அவர் மீரா 3rd பிளாக் என்று கூறி பக்கத்து மாடியில் நடந்து சென்றுகொண்டிருந்த மீராவை கை காட்டினார். அங்கு மீரா காதில் head set மாட்டிக்கொண்டு தலையில் ஒரு பிளாஸ்டிக் கவருடன் மழையில் நடந்து கொண்டிருந்தாள். நான் மீராவை கண்டு கை காட்ட, 2A பிளாட்டிலிருந்து டிவியில்,


என்றென்றும் 
என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பார்வையிலே....

பாடல் ஒலித்தது. கைக்கடிகாரத்தை பார்த்தேன் 1.30 மணி 30 டிசம்பர் 2021. Oh My God என்று கூறி கத்திக்கொண்டு மீராவை கை அசைத்து கூபாடிட்டேன். மீரா யார் என்று புரியாமல் என்னை பார்த்து கை அசைக்க மறுநொடி மின்னல் மீரா மீது அடித்தது, headset தெறித்தது. மீரா 1000 வாட்ஸ் பல்பு போல் ஜொலிஜொலித்தாள்...

1.30 மணி 30 டிசம்பர் 2021 அன்று,

சிவராஜ் பரமேஸ்வரன்...

எழுதியது!

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page